"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, October 30, 2010

சிங்கள - தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர் ஒன்றுகூடல்


-படங்களும் பதிவும் -சு. குணேஸ்வரன்

சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் ஒன்றுகூடலும் நூல் வெளியீட்டு விழாவும் 25.09.2010 அன்று கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு சிங்கள கலைஞர்கள் 25 பேரும் தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் 25 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் வரவேற்புரையை கமல் பெரேரா மற்றும் பத்மா சோமகாந்தன் ஆகியோரும்> படைப்பாளிகள் அறிமுகவுரைகளை வஜிர பிரபாத் விஜயசிங்க மற்றும் அந்தனி ஜீவா ஆகியோரும் நிகழ்த்தினர். கவிஞர் மேமன் கவியின் தலைமையில் குழுநிலைக்கலந்துரையாடல் மற்றும் கலை நிகழ்வு ஆகியன இடம்பெற்றன.

படைப்பாளிகள் சந்திப்பு நூல்வெளியீடு என்று இரண்டு நிகழ்வுகளாக இடம்பெற்ற மேற்படி ஒன்றுகூடலில் படைப்பாளிகளை வரவேற்றல்> அறிமுக நிகழ்வு குழுநிலைக்கலந்துரையாடல்> கலை நிகழ்வு> செயலமர்வில் கலந்துகொண்டோர் பரஸ்பரம் நினைவுச் சின்னம் பரிமாறிக்கொள்ளல்> ஆகியன காலை நிகழ்விலும், மாலை நிகழ்வில் அதிதிகள் உரையும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.

மாலை நிகழ்வுக்கு அதிதிகளாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் (பா. உ) ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். சிறப்புச் சொற்பொழிவாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ; பேராசிரியர் சபா ஜெயராசா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. கலந்து கொண்ட படைப்பாளகளின் விபரம் தாங்கிய 'தீபம்' என்ற நூலும் வெளியிடப்பட்டது.

காலை நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்ததால் அது சார்ந்த படங்களைக் காணலாம்.








இலக்கிய நிகழ்வுகளின் பதிவு -2

-படங்களும் பதிவும் -சு. குணேஸ்வரன்

1. அவை ஏற்பாட்டில்ஒரு வாசகனின் பிரதிகள்அறிமுகவிழா

கவிஞர் மேமன்கவியின் ‘ஒரு வாசகனின் பிரதிகள்’ நூல் அறிமுகவிழா யாழ்ப்பாணம் அல்வாய் கலையகத்தில் ‘அவை’ யின் ஏற்பாட்டில் 03.10.2010 அன்று எழுத்தாளர் தெணியான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் நூல் பற்றிய அறிமுக உரைகளை விரிவுரையாளர்கள் இரா.இராஜேஸ்கண்ணன் மற்றும் கலாநிதி த. கலாமணி அவர்களும் நிகழ்த்தினர். ஏற்புரையாகவும் சிறப்புரையாகவும் நூலின் உருவாக்கம் பற்றியும், தற்கால இலக்கியச் சூழலில் வாசிப்புநிலை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செல்வாக்கு என்பன பற்றி கவிஞர் மேமன்கவி விரிவாகப் பேசினார். நிகழ்வில் குறிப்புரையை க. பரணீதரனும் நன்றியுரையை வெ. துஷ்யந்தனும் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் அவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஒளிப்படங்கள்



2. கலைமுகம் 50 வது இதழ் வெளியீட்டு விழா

கலைமுகம் கலை இலக்கிய சமூக இதழின் 50 வது இதழ் வெளியீட்டு விழா நிகழ்வு 10.10.2010 அன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலையகத்தில் கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வாழ்த்துரைகளை சூழலியலாளரும் ஊடகவியலாளருமான பொ ஐங்கரநேசன் மற்றும் சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோ. ருஷாங்கன் ஆகியோர் வழங்கினர். வெளியீட்டுரையை திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் யோ. யோண்சன் ராஜ்குமார் நிகழ்த்தினார்.

நூல் மதிப்பீட்டுரைகளை கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய அதிபர் சு. சிறீகுமரன், மற்றும் விரிவுரையாளர் இரா.இராஜேஸ்கண்ணன் ஆகியோர் நிகழ்த்தினர். நூல் ஏற்புரையை கலைமுகம் பொறுப்பாசிரியர் செல்மர் எமிலும் நன்றியுரையை சூ. சதீஸ்குமாரும் நிகழ்த்தினர். இந்நிகழ்வுக்கு மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டமை நிகழ்வுக்கு கனதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.