"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, June 19, 2011

வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ - கவிதைநூல் வெளியீடு





கொடகே வெளியீடாக வந்துள்ள வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி அரங்கில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி மயூரி விவேகானந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தார். வரவேற்புரையை ராஜ சிறீதரன் நிகழ்த்தினார். நிகழ்வில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அதிதியாக தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திரு உபாலி லீலாரட்ன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் வாழ்த்துரையை ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தனும், வெளியீட்டுரையை கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும் நிகழ்த்தினர். நயப்புரைகளை சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் கவிஞர் மேமன்கவியும் நிகழ்த்தினர்.
நூலின் முதற்பிரதியை ‘சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை’ திரு சிதம்பரப்பிள்ளை சிவம் பிரதம அதிதி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் நூலாசிரியர் வதிரி சி. ரவீந்திரன் தன் மூத்தவர்களான முன்னோடிகள் திரு சி.க.இராஜேந்திரன் அவர்களையும் திரு க.குணசிங்கம் அவர்களையும் மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.

வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய ஐந்தாம் திருவிழா உபயகாரர்கள் சார்பில் முருகேசு பாக்கியராசா நூலாசிரியர் வதிரி சி. ரவீந்திரன் அவர்களை பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இன்னும் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

படைப்பாளிகளும் ஆர்வலர்களும் உறவுகளும் கலந்து சிறப்பித்தமை ஆரோக்கியமாக அமைந்திருந்தது.

பதிவும் படங்களும் :- சு.குணேஸ்வரன்































பதிவும் படங்களும் :- சு.குணேஸ்வரன்

Sunday, June 12, 2011

அகில இலங்கை கலை இலக்கியப் பெருவிழா


பதிவும் படங்களும் - சு.குணேஸ்வரன்

அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தின் கலை இலக்கியப் பெருவிழா 12.06.2011 ஞாயிறு காலை துன்னாலை வடிவேலர் மணிமண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பொன் சுகந்தன் தலைமையில் நடைபெற்றது.

பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், விகடகவி திருநாவுக்கரசு ஆகியோர் உரைநிகழ்த்தினர். உரைகள் யாவும் பண்பாட்டுப் பேணுகையையும் அதனைச் சீர்குலைக்கின்ற தொலைக்காட்சி உட்பட்ட சமூக பொருளாதார அம்சங்களையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தன.





இந்நிகழ்வில் கலை இலக்கியப் பணிக்காகச் சிறப்பாகச் சேவையாற்றி வரும் திருமறைக் கலாமன்றத்திற்கு 2010 ற்கான விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. விருதினை பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களிடமிருந்து திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞர் ஜி.பி.பேர்மினஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். விருது ஏற்புரையையும் நன்றியையும் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் ஜோன்சன் ராஜ்குமார் நிகழ்த்தினார்.


“ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு” என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.