"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Thursday, September 13, 2018

கரும்பாவளி குப்பைமேட்டை அகற்றுவோம் – சந்திப்பு 1



முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களுக்கு இப்பிரச்சினையை மாகாணசபை உறுப்பினர் திரு சிவயோகன் ஊடாக முன்வைத்திருந்தோம். அதனையடுத்து முதலமைச்சர் அலுவலகம் 13.09.2018 வியாழக்கிழமை கரும்பாவளி தொடர்பான பிரச்சினை தொடர்பாக சந்தித்து உரையாடுவதற்கு அழைத்திருந்தது. பொதுநிறுவனங்களின் உறுப்பினர் ஐவர் கொண்ட குழுவினருடன் (கலாநிதி சு. குணேஸ்வரன், வே. பவதாரணன், திரு ம. தம்பித்துரை, திரு த. குமார், திரு கு. சசிகுமார் ) பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் அவர்களும் மாகாணசபை உறுப்பினர் திரு சிவயோகன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றச் செயலாளர் உட்பட வடமாகாண உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

குப்பை கொட்டுவதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் அப்பிரதேசம் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் இடம் என்பதையும் குறித்த பிரதேசத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தி மாற்று ஏற்பாடு செய்யுமாறும் நாங்கள் கோரிக்கையை முன்வைத்தோம்.

சூழலியல் எந்திரவியலாளர், உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளர், வல்வை நகரசபைச் செயலாளர், பேராசிரியர் ப. புஷ்பரட்ணம், பிரதேச மக்கள் இருவர் ஆகியோரைக் கொண்ட குழு குறித்த பிரதேசத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து குப்பை கொட்டுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து தமக்கு இரண்டு வாரங்களில் அறிக்கை தருமாறு வடமாகாண உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளருக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் அறிவுறுத்தினார்.

குப்பை அகற்றும்வரை தொடர்ச்சியான சந்திப்புக்களுக்கும் போராட்டங்களுக்கும் தேவை ஏற்படும் என எண்ணுகின்றோம்.






No comments:

Post a Comment