"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, August 29, 2010

மண்சுமந்த மேனியர் – உதவித்திட்டம்




பதிவு :- சு. குணேஸ்வரன்

சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் திட்ட அங்குரார்ப்பண வைபவம் 29.08.2010 அன்று வடமராட்சி திக்கம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. ‘மண்சுமந்த மேனியர்’ என்ற மகுடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலைப் பிள்ளைகளை மனங்கொண்டு பல சமூகநல உதவிக்கான செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தபாலதிபர் அ. அருளானந்தசோதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கலந்து கொண்டார். ஆசியுரையை சிவசிறீ சோமஸ்கந்த தண்டபாணிக தேசிகர் வழங்கினார். கெளரவ விருந்தினர்களாக சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன்> வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளர் பி. கிருஷ்ணானந்தன்> இனிய வாழ்வு இல்ல இயக்குனர் பி. ராஜ்குமார்> கிளிநொச்சி கிராஞ்சி அ. த. க. பாடசாலை அதிபர் என். கேசவன்> கிளிநொச்சி தொழிற்பயிற்சி அதிகார சபை திட்ட அலுவலர் பி. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் கடின உழைப்பின் மத்தியில் இவ்வாறு அனுப்புகின்ற பணம் சரியான வகையில் உரிய பயனாளிகளைச் சென்று சேரவேண்டும் என்றும் யுத்தத்தால் நொந்து போயுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களின் உதவியை நாடுவதில் தவறில்லை எனவும் எதிர்காலத்தில் சுயகாலில் எழுந்து நின்று எங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் நாம் எம்மைத் தயார்ப்படுத்த இந்த உதவிகள் ஒரு ஊன்றுகோலாக இருக்கவேண்டும் என்றவாறான பொருள்பட கலந்துகொண்டவர்கள் உரையாற்றினார்கள்.

இனிய வாழ்வு இல்ல இயக்குனரின் உரை அவர் போரினால் பட்ட அனுபவங்களையும் சமூகத்தில் பலவித போராட்டங்களின் மத்தியிலேயே வாழவேண்டிய சூழ்நிலைகளையும் எடுத்துக்காட்டியது.

இந்நிகழ்வில் 10 துவிச்சக்கர வண்டிகள் தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. அத்தோடு குறிப்பிட்ட ஒரு தொகைப் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக அவர்களின் படிப்புக்கென பணஉதவிக்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆசிரியப் பற்றாக்குறையாக உள்ள கிளிநொச்சி பாடசாலை ஒன்றுக்கு கல்வி கற்பிப்பதற்கென ஆசிரியர் மூவருக்கான வேதனம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.


இந்த ஏற்பாடுகளை ‘மண்சுமந்த மேனியர்’ அமைப்பின் வடமராட்சி திட்ட இயக்குநர் என். சுபேந்திரா> மற்றும் இணைப்பாளர் கே. குமணன் ஆகியோர் வடமராட்சியிலிருந்து சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி செய்திருந்தனர். இவ்வாறான முன்மாதிரியான செயற்பாடுகளே நொந்துபோயுள்ள எங்கள் பிள்ளைகளுக்கு மிக அவசியமாக மேற்கொள்ளவேண்டிய சேவையாகவுள்ளது.

சீரழிவுகள் மேலோங்கிக்கொண்டிருக்கின்றயாழ்ப்பாணக்குடாநாட்டிலே ஒரு மிகப்பெறுமதியான நிகழ்வுஒன்றை ஏற்பாடுசெய்தவர்களும் அதற்குஉதவுபவர்களும்உண்மையில்நன்றிக்குரியவர்களே.

Monday, August 2, 2010

புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை



பதிவு:- சு. குணேஸ்வரன்

பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர் புகலிடத்தின் தற்போதைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினர். அவர்கள் தமது உரையில் புகலிட இலக்கியவாதிகளின் இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகள்> பெண்களின் இலக்கிய சமூகச் செயற்பாடுகள் பற்றி உரையாற்றினர்.


நிகழ்வில்
தொடக்கவுரையை இலக்கியச்சோலை து. குலசிங்கமும்> அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நன்றியுரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வதிரி சி. ரவீந்திரன்> குலசிங்கம்> குணேஸ்வரன்> அஜந்தகுமார்> இராகவன்> கொற்றை பி. கிருஸ்ணானந்தன்> செ. கணேசன்> கண.எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு உதவும்பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பருத்தித்துறை அஞ்சலியகத்தில் ஒப்படைப்பதற்குரிய ஏற்பாடு ஒன்று
செய்யப்பட்டிருந்தது. பருத்தித்துறை அஞ்சலியகத்தில் வண பிதா டேமியன் அவர்களைச் சந்தித்து புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் றஞ்சி சுவிஸ் ரவி ஆகியோர் இன்னொரு தோழி மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு தொகைப் பணத்தை டேமியன் அவர்களிடம் கையளித்தனர். இலக்கிய நட்பின் மூலம் இவ்வாறான சீரிய பணியைச் செய்ய முன்வந்தவர்களை
நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.