"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, September 12, 2020

மணற்கேணியின் “ஆய்வு உலா” உரைத்தொடரில் இலங்கையரின் ஆய்வுரைகள்

 தமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் மணற்கேணிஆய்விதழ் நடத்தவிருக்கும் ஆய்வு உலாஇணையவழி ஆய்வுரைத் தொடரில் ஈழத்து ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

13.09.2020 முதல் 28.09.2020 வரையான காலப் பகுதியில், தினமும் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள இந்த உரையரங்கில் தினமும் ஓர் ஆராய்ச்சியாளர் உரை நிகழ்த்த உள்ளார். இந்த ஆய்வுரைத் தொடரில் இலங்கை மற்றும் இந்தியாவிலருந்து பங்குபற்றும் 16 ஆய்வாளர்கள் பல்வேறு பொருண்மைகளில் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர்.

இலங்கையிலிருந்து ஐவர் இத்தொடரில் உரையாற்றுகிறார்கள். த. அஜந்தகுமார் (யாழ்ப்பாணம் ஆழியவளை, இலங்கைத் திருச்சபைத் தமிழ்க் கலவன் வித்தியாலயம்) இலங்கைத் தமிழ்ப் பெண்  படைப்பாளிகளின் சிறுகதைகள் - சமூக நோக்கு எனும் தலைப்பில் 15.09.2020 அன்றும், இரா. இராஜேஸ்கண்ணன் ( சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) மதச்சார்புக் கல்வியும் சமூக அசைவியக்கமும் - பின்காலனிய யாழ்ப்பாணத்துச் சமூக உருமாற்றமும் பற்றிய ஓர் உசாவல் எனும் தலைப்பில் 18.09.2020 அன்றும், க.ஜெயதீஸ்வரன் (விரிவுரையாளர் வரலாற்றுத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) யாழ்ப்பாண அரசிற்கும் தென்னிலங்கை அரசுகளுக்கும் இடையிலான அரசியல் உறவு - ஒரு வரலாற்றுப் பார்வை எனும் தலைப்பில் 22.09.2020 அன்றும், மார்க்கண்டன் ரூபவதனன் (பொதுசன நிருவாகத் துறைத் தலைவர், ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்) ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளையின் தமிழியற் பணிகள் எனும் தலைப்பில் 24.09.2020 அன்றும், கலாநிதி  சு. குணேஸ்வரன் (யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மாகா வித்தியாலயம்) புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு எனும் தலைப்பில் 27.09.2020 அன்றும் உரை நிகழ்த்துகின்றனர். 

       

இந்திய - இலங்கை ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் இந்த உரைத்தொடரில் தினமும் உரை நிகழ்வு நிறைவுற்றதும் உரையாளருடன் ஆய்வு மாணவர்கள் கலந்துரையாடலையும் நிகழ்த்த உள்ளனர். இந்த உரையாடல் நிகழ்வில் இலங்கையிலிருந்து வி. விமலாதித்தன், எ. அனுசாந்தன், த. அருண்விழி ஆகியோர் இந்திய மாணவர்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளனர். மணற்கேணி ஆய்விதழின் ஸ்தாபகரும் பல்துறை ஆய்வாளருமான கலாநிதி து. ரவிக்குமாரின் நெறிப்படுத்தலில் கலாநிதி செ. சுதர்சன் (இலங்கை), கலாநிதி சு. தேன்மொழி (தமிழ்நாடு) ஆகியோர் இந்த இணையவழி ஆய்வுரைத் தொடரின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டுள்ளனர்.

கலாநிதி தே. வீ. சுமதி, த. ஜீவராசா, கோ. மணிகண்டன் ஆகியோர் உரை நிகழ்ச்சிகளை இணையவழியாக zoom மென்பொருள் மூலம் ஒழுங்கமைத்து வழங்குகின்றனர். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரையும் இந்த உரைத்தொடரில் இணையவழிப் பார்வையாளராக இணைந்து சிறப்பிக்குமாறு மணற்கேணி ஆய்வு இதழ் அழைப்புவிடுத்துள்ளது. மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் 13.09.2020 முதல் 28.09.2020 வரை தினமும் இரவு 7 மணிக்கு உரை நிகழ்வு ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது. இணையவழி zoom மென்பொருள் மூலம் 5012349855 எனும் அடையாளக் குறியீட்டு எண்ணையும் MKENI எனும் திறவுச் சொல்லைம் பயன்படுத்தி (ID:5012349855, Passcode:MKENI) ஆய்வு உலாவில் பங்குபற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 







No comments:

Post a Comment